பாபநாசம், அக்.5 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகிறார் என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும், அதில் 75,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிய வருகிறது. இந்த நோயை ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்க முடியும் என பல்வேறு நாடுகளின் அனுபவங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அரசு இதுவரை இந்த தடுப்பூசியை இலவசமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கவில்லை என்பதனை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் நிலையில், ஒன்றிய அரசு 11 வயது முதல் 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.