districts

img

பட்டுக்கோட்டை அழகிரி மணிமண்டபத்தை அரசு முறையாகப் பராமரிக்குமா?  

விவசாயத் தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டது திருவண்ணாமலை மாவட்டமாகும். அந்த விவசாயத் தொழிலும், செய்ய முடியாமல், பல்வேறு காரணங்களால் பிழைப்பு தேடி ஏழை-எளிய மக்கள் பெரு நகரங்களுக்கு கூலி வேலை செய்ய செல்கின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் தேவை ஒரு புறம் இருந்தாலும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அவசியமாகும். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற வந்தவாசியில் பாய் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. கோரைபாய் உற்பத்தி மற்றும் பாய் நெசவு தொழிலில் பல ஆண்டுகளாக வந்தவாசி பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தரமான கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், அரசின் சலுகைகள் போதிய அளவு கிடைக்காததால் அந்த தொழிலை தொடர முடியாத நிலை உள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாய் உற்பத்தி தொழிலை மேம்படுத்த, பாய் உற்பத்தியாளர்களுக்கு இலவச மின்சாரம், வட்டியால்லா கடன் திட்டம், நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வந்தவாசியில் கோரைப்பாய் உற்பத்தி நெசவாளர் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டார செயலாளர் அ. அப்துல்காதர் கூறும்போது, “வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் கோரைப்பாய் தயாரிக்கப்படுகிறது.

வந்தவாசியை சுற்றியுள்ள தென்னாங்கூர், மாலையிட்டான்குப்பம், வடநாங்கூர் உள்ளிட்ட  கிராமங்களில்  ஏழை கூலித் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் பாய்கள், தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தமிழகத்தில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திய, வர்தா புயல், கஜா புயல் போன்ற வெள்ள பாதிப்புகளின் போது, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பாய் தேவைக்காக வந்தவாசியை நோக்கி படையெடுத்தனர். வந்தவாசியில் அரசு கூட்டுறவு சங்கம் பத்தாண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது. அந்த சங்கத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து நவீன எந்திரங்களைக் கொண்டு பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றார். வந்தவாசி நகரில் பாய் தொழில் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டப்படும். வந்தவாசி நகரை பாய் நகரம் என்று அறிவிக்கப்படும் என்றும் பாய் உற்பத்திக்கு மானியம் வழங்கப்படும் என்றும் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எனவே, திருவண்ணாமலை மாவட்ட தொழில் வளத்தையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் வந்தவாசி பாய் உற்பத்தி தொழிலை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. - செந்தாமரைக்கண்ணன்