தஞ்சாவூர், ஏப். 3 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறை, கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை மற்றும் தஞ்சாவூர் பாலு ஹோண்டா நிறுவனம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க கூடாது என்பது பற்றியும் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தினை பெற்று தருவதற்கு வட்டார போக்குவரத்து துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரக போக்குவரத்து துணை ஆணையர் முனைவர் எஸ்.கருப்பசாமி சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கே.முருகன், தஞ்சாவூர் சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன், வழக்கறிஞர் கோவி.உத்திராபதி ஆகியோர் பேசினர். பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் க.சங்கர், வளர்தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் கு.சின்னப்பன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.