சேதுபாவாசத்திரம், ஜன.20- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளத்தூர், இரண்டாம்புளிக்காடு, கரம்பக்காடு, சேதுபாவாசத்திரம், ரெட்ட வயல், அடைக்கத்தேவன், திருவத் தேவன், செம்பியன் மாதேவிபட்டினம், செந்தலைவயல், வாத்தலைக்காடு, ராவுத் தன்வயல், செருபாலாக்காடு ஆகிய ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடை பெற்றன. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இரண்டாம்புளிக்காடு ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. செருபாலக்காடு ஊராட்சியில் நடை பெற்ற சிறப்பு முகாமில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து, ஒரு பயனாளிக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம், 300 பயனாளிகளுக்கு 600 தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கினார். தொடர்ந்து, கரிசவயல் துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறந்து வைக்கப்பட்டது. விதை கிராம திட்டத்தின் கீழ் 50 விழுக்காடு மானியத்தில் உளுந்து விதைகள், தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் 50 விழுக்காடு மானியத்தில் சோயா விதைகள், டி.விரிடி ஆகியன விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேராவூரணி), தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா, வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.