districts

img

காவிரி நீரை வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

காவிரி நீரை வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கடையடைப்பு, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. 

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு, காவிரியில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்ட பயிர்கள் இரண்டு லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன. 

எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளை தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும், ஒன்றிய அரசு இதில் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 11ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டங்களில் பங்கேற்றோர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. 

முழு அடைப்பு காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 13 இடங்களில் ஆர்ப்பாட்டமும், 8 இடங்களில் முற்றுகைப் போராட்டமும், 7 இடங்களில் மறியலும் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காவல்துறை கணக்கின்படி 1259 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையொட்டி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று எல்ஐசி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ. சண்முகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர். மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, என்.சரவணன், எம்.மாலதி, மாநகரச் செயலாளர் வடிவேலன், திமுக சார்பில் மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் 

து.செல்வம், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜேம்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் முத்து. உத்திராபதி, சோ.பாஸ்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், சொக்கா ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சி ஐ. எம்.பாதுஷா, திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்திய மாணவர் சங்கம் சார்பில், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

பேராவூரணி ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம் வை.சிதம்பரம், திமுக சுப.சேகர், மு.கி.முத்துமாணிக்கம், சிபிஐ பா.பாலசுந்தரம், சிபிஎம் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி, வே.ரெங்கசாமி, மதிமுக பாலசுப்பிரமணியன், குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி பஷீர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு, நடைபெற்ற மறியலில், திமுக முன்னாள் எம்எல்ஏ ஏனாதி பாலசுப்பிரமணியன், சிபிஐ சி.பக்கிரிசாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு எம்.செல்வம், காங்கிரஸ் வழக்குரைஞர் ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சக்ரவர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுக்கூர் தபால் நிலையம் முன்பு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.அய்யநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் ஏ.எம்.வேதாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, காசிநாதன் கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு திமுக முன்னாள் எம்எல்ஏ எம்.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், விவசாயிகள் சங்கம் மோகன் தாஸ், விவசாய தொழிலாளர் சங்கம் கு.பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், பூதலூரில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், திமுக நகர செயலாளர் சுபா, காங்கிரஸ் கட்சி அறிவழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செந்தில் சிலம்பரசன், சமவெளி இயக்கம் சு.பழனி ராஜன் கலந்து கொண்டனர். செங்கிப்பட்டியில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி, திமுக ஒன்றிய செயலாளர் முருகானந்தம், காங்கிரஸ் கட்சி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக்காட்டு பள்ளியில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன்றியச் செயலாளர் ரமேஷ், திமுக ஒன்றியக்குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, நகரச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவையாறு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எம்.பழனி அய்யா, ஒன்றிய செயலாளர் எம்.ராம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ. ராஜா, எம்.கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.