தஞ்சாவூர், நவ.11 - வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 51 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு உதவிடும் வகையிலும் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், பேரிடர் காலமாக இருப்பதை கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தால், மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 51 பாதுகாப்பு குழுக்களுக்கும் தகவல் அளித்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த மாமன்ற உறுப்பினர்களின் தலைமையில், மாநகராட்சியில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 51 வார்டுகளுக்கும் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சியில் உள்ள 850 பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக 18004251100 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 7598016621, 04362 231021 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் மாநகராட்சி பணியாளர்கள் மூவர் பணியில் இருப்பார்கள். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் நூறாண்டு கடந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான கட்டிடங்களின் உரிமையாளர்கள், பாதுகாப்பு கருதி யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம். வலுவில்லாத கட்டிடங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அதில் யாரும் குடியிருக்க வேண்டாம். மாநகராட்சியில் உள்ள நான்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனை, கால்நடை மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வாகனம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த முறை மின் ஊழியர்களும் எங்களோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மரம் எங்கு விழுந்தாலும் உடனடியாக அவற்றை அகற்றவும், பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பத்து ஜேசிபி இயந்திரங்கள், 10 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 5 ஆயில் மோட்டார்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன”. இவ்வாறு அவர் கூறினார்.