districts

img

பட்டுக்கோட்டை சந்தையில் களைகட்டும் புளி விற்பனை

தஞ்சாவூர், மே 10 - பட்டுக்கோட்டையில் சமையல் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் புளி அமோக விற்பனையாகி வருகிறது.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில், அண்ணா சிலைக்கு அருகே வாரச்சந்தை பிரதி திங்கள்கிழமை தோறும் இயங்கி வருகிறது. இங்குள்ள வாரச்சந்தையில், காய்கறிகள், கீரைகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, தேங்காய் என பல பொருட்களும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். விவசாயிகள், வியாபாரிகள் சந்தைக்கு தங்கள் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். பட்டுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை பட்டுக்கோட்டை சந்தைக்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புளி விற்பனை  இந்நிலையில் தற்போது பட்டுக்கோட்டை சந்தைக்கு புளி வரத்து அதிகரித்துள்ளது. தை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை புளி விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, புதுக்கோட்டை, திருமயம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவில், வியாபாரிகளால் பட்டுக்கோட்டை சந்தைக்கு புளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.  இதேபோன்று சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் புளியை சிறு விவசாயிகள், பெண்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு வியாபாரிகள், விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

விலை
சந்தையில் கொட்டையுடன் கூடிய புளி தற்போது ரூ.50 முதல் 70 வரையிலும், கொட்டை நீக்கிய புளி ரூ.100 முதல் 130 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் தற்போது ராஞ்சி புளி, நாட்டுப்புளி, பட்டப்புளி, சாந்துப்புளி என பல ரகங்களை சேர்ந்த புது புளி விற்பனைக்கு வந்துள்ளது.

விற்பனை அமோகம்
இதுகுறித்து வியாபாரி சுந்தர்ராஜ் கூறுகையில், “கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து அதிக அளவிலான புளி கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகிறோம். பத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒரு லாரியை வாடகைக்கு அமர்த்தி, 10 டன், 15 டன் எனக் கொண்டு வந்து, பட்டுக்கோட்டையில் இறக்கி தனித்தனியாக சந்தையில் விற்பனை செய்து வருகிறோம். மற்ற நாட்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வீடு வீடாக விற்பனை செய்து வருகிறோம்.
வாரச்சந்தையான திங்கட்கிழமை ஒவ்வொருவருக்கும் 500 முதல் 600 கிலோ புளி விற்பனையாகி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு 10 கிலோ, 20 கிலோ என வாங்கிச் செல்கின்றனர். அதேபோல மளிகைக் கடைக்காரர்கள், உணவக உரிமையாளர்கள், திருமண அரங்க உரிமையாளர்கள், எங்களிடம் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தற்போது திருவிழாக் காலமாக இருப்பதால் கோயில்களில் நடைபெறும் அன்னதானம், திருமண விழாக்களுக்கு அதிக அளவில் விற்பனை செய்து வருகிறோம்” என்றார். புளி சுவைக்காக மட்டுமல்லாமல், பாரம்பரிய மருத்துவத்திலும், மருந்தாக பயன்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தையாமின், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. நாம் பயன்படுத்தும் புளி அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சிசால்பினியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தின் தாவரவியல் பெயர் டேமரிண்டஸ் இண்டிகா என்பது. இதன் தாயகம் இந்தியா, ஆப்பிரிக்கா எனவும் கருதப்படுகிறது.

புளி தட்டுப்பாடு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, மதுக்கூர், திருவோணம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக, ஆயிரக்கணக்கான புளிய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதேபோல கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று வீசிய கஜா புயல் ஏராளமான புளிய மரங்களை வேரோடு வீழ்த்தியது. இதனால், இப்பகுதியில் புளி விளைச்சல் குறைந்து, தேவைக்காக வெளிமாவட்டத்தை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.