districts

img

சேதமடைந்து வரும் பாலம்... நெடுஞ்சாலைத்துறை கவனிக்குமா?

தஞ்சாவூர், மே 1 - பேராவூரணி அருகே கல்லணைக் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சேதமடைந்து வருகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் தஞ்சாவூர் - சாயல்குடி மாநில நெடுஞ்சாலையில் (SH29) ஆவணம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே 2014-2015-ல் பாலம் கட்டப்பட்டது.  தற்போது இப்பாலத்தின் நடுவில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் சேதமடைந்து, அதில் உள்ள கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியே நீட்டியவாறு உள்ளன. இதனால், இவ்வழியாக பயணிக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர் அடிக்கடி பஞ்சராகி விடுகிறது.  சிமெண்ட் காரை அவ்வப்போது பெய்யும் மழை காரணமாகவும், கனரக வாகனங்கள் பயணிக்கும் போதும் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகிறது. எனவே, பாலம் முழுவதும் சேதமடைவதற்கு முன்னதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, பழுதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.