districts

வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் புத்தூர் ரேசன் கடை பொதுமக்கள் சாலை மறியல்

சீர்காழி, ஜன.29 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்க்கும் விற்பனையாளர் மேலும் இரண்டு கடைகளில் பணிபுரிந்து, இந்த கடையிலும் பணிபுரிந்து வருவதால், வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே புத்தூர் ரேசன் கடையை திறந்து பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிகிறது.  தொடர்ந்து அனைத்து நாட்களிலும் ரேசன் கடை திறக்கப்படாமல் உள்ளதால் அனைத்து  பொருட்களையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடையின் மூலம் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெள்ளியன்று இரவு சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சாலையின் குறுக்கே கையில் எடுத்து வந்த பைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.