மகுடஞ்சாவடி அருகே செயல்பட்டு வரும் அரசு வங்கியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டம் மகுடஞ்சாவடி அருகே கண்ணந்தேரியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கி கொங்கணாபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்வதாக வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் 10ம் தேதி திங்கள்கிழமையன்று கண்ணந்தேரில் இயங்கி வந்த அலகாபாத் இந்தியன் வங்கியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் பகுதியில் ஏராளமானோர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும் இதனை வேறு இடத்திற்கு மாற்றினால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், ஆகவே இந்த வங்கியை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது என கூறி, கோரிக்கை மனு ஒன்றை வங்கியின் மேலாளர் விஜயராகவனிடம் கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட வங்கி மேலாளர் விஜயராகவன் இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் கண்ணந்தேரி இந்தியன் வங்கியின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.