districts

நள்ளிரவு நடன பார்களுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி

புதுச்சேரி, ஏப். 10- புதுவை நகர் பகுதியில் நூற்றுக் கணக்கான மது பார்கள் ஏற்கனவே இயங்கி வருகிறது. தற்போது ரெஸ்டோபார் எனப்படும் நடன அரங்கத்துடன் கூடிய மது பார்களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இந்த மதுபார்கள் நகர், புறநகர் பகுதிகளில் அதிகளவில் திறக்கப்படுகிறது. குடியிருப்புகள், கோவில், பள்ளி அருகே ரெஸ்டோ பார் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அரசின் வருவாயை பெருக்கும் வகையில் ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வார இறுதியில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒரு தரப்பினர் ரெஸ்டோ பாருக்காகவே வருகை தருகின்றனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து வரும் சுற்றுலா  பயணிகள் மது அருந்திவிட்டு, நடனமாடு வதை விரும்புகின்றனர். அதோடு நள்ளிரவு  வரை ரெஸ்டோ பார் திறந்து செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால்  நள்ளிரவுக்கு மேல் மது அருந்தி கொண்டாடி  விட்டு, நள்ளிரவு, அதிகாலைக்கு மேல்தான் விடுதிகளுக்கு திரும்புகின்றனர். புதுவையில் இருசக்கர வாகனங்களும் அதிகளவு வாடகைக்கு விடப்படுவதால், இதுபோன்ற ரெஸ்டோ பார் செல்பவர்கள், கார், மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் செல்கின்றனர். அப்போது ஒரு சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்கனவே புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் புதுவை இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். சமீபகாலமாக ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற ஒரு சம்பவத்தில்தான் லப்போர்த் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொறியாளரை தாக்கியதில் அவர் பலியானார். இது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மக்களுக்கு பிரெஞ்சு காலத்தில் இருந்தே மது அருந்தும் பழக்கம், பார்ட்டி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு இடையூறாகவோ, பொது இடங்களில் அருவருக்கத்தக்க வகையிலோ நடப்பதோ கிடையாது. ஆனால் புதிய ரெஸ்டோ பார் கலாச்சாரம் சாலையின் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடுவது, பொது மக்களை அச்சுறுத்துவது போன்ற சம்பவங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே ரெஸ்டோ பார் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள் ளன. இதனால் புதுவை அரசுக்கு வருவாயா?  வருங்காலமா? என்ற நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.