districts

img

ஓசூர்: செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஓசூர் அருகே கூஸ்தனப்பள்ளியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்னப்பள்ளி அருகே கூஸ்தனப்பள்ளியில் இயங்கிவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தொழிற்சாலையின் ஆலோ பிளான்ட் ரசாயன பகுதியில் திடீரென சனிக்கிழமை காலையில் தீ பற்றியது. அந்தப் பகுதியில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு முதல் கட்டமாக தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால், ரசாயன பகுதி என்பதால் தீ மளமளவென பரவியது. தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு தகவல் சென்றதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயானது ரசாயன பகுதியில் ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஓசூர் தீயணைப்புத் துறையினர் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.