கடலூர், ஜூன் 2- கடலூர் மாவட்டத்தில் வரும் 7ஆம் தேதி முதல் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 7ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. கடலூர் வட்டத்தில் ஆட்சியர் தலைமையில் 21ஆம் தேதி வரை நடக்கிறது. புவனகிரி வட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) தலைமையில் 15ஆம் தேதி வரையும், குறிஞ்சிப்பாடியில் கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் 15ஆம் தேதி வரையும், சிதம்பரத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் 21ஆம் தேதி வரையிலும், திட்டக்குடி வட்டத்தில் விருத்தாசலம் கோட்டாட்சியர் தலைமையில் 21ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்கு கலால் உதவி ஆணையர், விருத்தாசலம் வட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பண்ருட்டிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூர் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) ஆகியோர் தலைமையில் இந்த முகாம் நடைபெறுகிறது. பட்டா மற்றும் இதர நலத்திட்ட கோரிக்கைகள் குறித்து பொது மக்கள் மனுக்களாக எழுதி வருவாய் தீர்வாயம் நடக்கும் நாளன்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். பொதுமக்களின் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் உரிய விசாரணை செய்யப்பட்டு தீர்வாய நாட்களில் தகுதியின் அடிப்படையில் உடனடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய கிராமத்திற்கு வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில் தங்களது மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.