districts

img

பழனி முருகன் கோவில் போகர் ஜெயந்தி விழாவை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்துக: சிபிஐ(எம்) வேண்டுகோள்

திண்டுக்கல், மே 12- பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் உள்ள சித்தர் போகரின் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையே எடுத்துநடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டா யுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை,  வைகாசி விசாகம் எனத் தொடர்ந்து விழாக்கள் நடப்பது வழக்கம். அது போல் மலைக் கோவிலில் போகர் சன்னதி ஜீவசமாதி யில் உள்ள சித்தர் போகரின் ஜெயந்தி விழாவும் நடைபெறுவது வழக்கம். போகர், 18 சித்தர்களில் மிக முக்கிய மான சித்தர். அதே போல போகரின் மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் புலிப்பாணி சித்தர். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய நவபாஷாண மூலிகைச் சிலையே தண்டாயுதபாணி முருகனாக பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.  போகரின் ஜீவசமாதி சன்னதி மலைக் கோவில் அருகே அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மே 18  அன்று ஜெயந்தி விழாவும் நடைபெறுவது வழக்கம்

தனியார் அமைப்புகள் அறிவிப்பு

இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள போகர் ஜீவ சமாதியில் போகர் ஜெயந்தி விழா நடத்தப் போவதாக சில தனியார் அமைப்புகள் அறிவித்தன. போகர் ஜெயந்தி விழாவை நடத்த லாம். அதை யார் நடத்துவது என்ற  கேள்வி தான் முக்கியமானது. இந்து  சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள போகர் ஜீவ சமாதி யில் அறநிலையத்துறை சார்பில்  போகர் ஜெயந்தி விழா நடத்துவதே சரியானது. போகர் ஜீவ சமாதி என்பது தண்டாயுத பாணி சுவாமி திருக்கோவிலின் ஒரு  உப சன்னதி ஆகும். போகர் சன்னதி யில் தினசரி பூஜை சாமான்கள், நைய்வேத்திய பிரசாதம் ஆகியவை மலைக்கோவில் மடப்பள்ளியில் இருந்து வழங்கப்படுகின்றன.   போகர் சன்னதியிலுள்ள மரகத லிங்கம், புவனேஷ்வரி அம்மன் சிலை,  தங்க, வெள்ளி ஆபரணங்கள்,  கவ சங்கள் அனைத்தும் கோவில் நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், போகர் சன்னதி பூசகர்கள், போகர் சன்னதி தங்களின் தனிப்பட்ட உரிமை எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அறநிலையத்துறை நிர்வாகம் தடை ஆணை பெற்றுள்ளது.  இந்த நிலையில், போகர் ஜெயந்தி நடத்தலாம் என்று நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் உப கோவிலான போகர் சன்னதியை சிலர் உரிமை கோருவதை பயன்படுத்திக்கொண்டு ஆர்எஸ்எஸ்-பாஜகவைச் சேர்ந்த கும்பல் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும். போகர் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையே நடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.