ஊத்துக்கோட்டை, மார்ச் 20- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால் குடி நீர் ஏரிகள் அனைத்தும் நிரம்பின. போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. ஏரிகளில் இருந்து தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருவதால் அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது. தற்போது நிலவரப்படி 5 ஏரிக ளிலும் மொத்தம் 9246 மி.கன அடி தண்ணீர் (9.2 டி.எம்.சி.) உள்ளது. வழக்க மாக சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக மாதத்துக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். எனவே இப்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கொண்டு இன்னும் 9 மாதத்துக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அடுத்த மாதம் முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த உயரம் 3,231 மி.கன அடி. இதில் 2,072 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 5.3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சோழவரம் ஏரியில் 1081 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியில் 770 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது. 215 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.புழல் ஏரி யில் 2,894 மி.கன அடி தண்ணீரும் (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி), செம்பரம்பாக்கம் ஏரியில் 3010 மி.கன அடி தண்ணீரும் (3,645 மி.கன அடி) உள்ளது.