districts

வண்டல் மண் எடுக்க விழுப்புரம் ஆட்சியர் அனுமதி

விழுப்புரம், ஜூன் 23- விவசாயிகள் தங்கள் நிலத்தை செம்மைப்படுத்த ஏரி வண்டல் மண் எடுத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும், பொது மக்கள் தங்களின் இதர பயன்பாட்டிற்காக தங்கள் கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும், ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரித்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசால் விலையில்லாமல் விவசாயிகள், இதர பொதுமக்களுக்கு வழங்க தகுதி வாய்ந்த நீர் நிலைகளின் விவரம், புல எண் மற்றும் அகற்ற முடிவு செய்துள்ள கனிமத்தின் அளவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் வாயிலாக விவரங்கள் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 75 கன மீட்டர் (25 டிராக்டர் லொடுகள்), புஞ்சை நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 90 கன மீட்டர் (30 டிராக்டர் லொடுகள்), வீட்டுப் - பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் (10 டிராக்டர் லொடுகள்), மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 60 கன மீட்டர் ((20 டிராக்டர் லொடுகள்) அளவிற்கு வண்டல்மண்,களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  விவசாய நிலங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம். வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கிராம கணக்குகளுடன் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை மற்றும் அடங்கல் சான்றுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.