districts

பெயிண்டர் கொலை: நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

சென்னை, மே 30- தேனாம்பேட்டை  எஸ்.எஸ்.புரம், ராதா நகர் பகுதியைச் சேர்ந்தவர்  சுந்தரமூர்த்தி (35).  பெயிண்டராக வேலை செய்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து பெரும்பாக்கம், எழில் நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.   இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுந்தரமூர்த்தி நேதாஜி சாலையில் உள்ள மருந்து கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் சுந்தரமூர்த்தியை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடி விட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்பாக்கம் காவல் துறையினர் சுந்தரமூர்த்தி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த பொறை சந்தோஷ், விஜய்பாபு ஆகிய இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை சரணடைந்திருப்பதாகவும், இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த பின்னரே, கொலைக்கான காரணம் தெரியவரும் என பெரும்பாக்கம் காவல் துறையினர் தெரிவித்தனர்.