சென்னை,மே 24- பாதுகாப்புத்துறை குறித்த படிப்புகளை தொடங்குவது குறித்து ஊட்டியில் உள்ள ராணுவத்துறையின் வெலிங்டன் பாதுகாப்பு பயிற்சிக்கல்லூரியுடன் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஊட்டி வெலிங்டன் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பயிற்சிக்கல்லூரியின் கமாண்டென்ட் லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன்,எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர், கையெழுத்திட்டனர். பாதுகாப்புத்துறையின் ராணுவம் மற்றும் போர்த்திறன் கல்வி,பேரிடர் மேலாண்மை, பொருளாதாரம்,சர்வதேச உறவுகள் சைபர் வார்ப்பர் மின்னனு மற்றும் ஆயுத தொழிற்நுட்பம், பாதுகாப்பு நிதிநிலை போன்ற பல்வேறு தலைப்புகளில் பாதுகாப்புத்துறையினர், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளலாம் என்று துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். முதற்கட்டமாக ஐந்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.