சென்னை, ஜன. 27- குடியரசு தினத்தை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் 50 மையங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவம் தாங்கிய வாகனம் புறக்கணிக்கப்பட்டது. இதனைக் கண்டித்தும், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைகூர்ந்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மையங்களில் தேசிய கொடியேற்றி, அரசியலமைப்பு சட்டம், மாநில உரிமைகள், மத நல்லிணக்கம் ஆகிய வற்றை பாதுகாக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது. பல்லாவரம், மயிலாப்பூர் பகுதிகளில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனும், திரு வான்மியூரில் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவும் கலந்து கொண்டார். மத்தியசென்னை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மையங்களில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி தர்மாபுரத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா கலந்து கொண்டார். இதேபோன்று சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சஙகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் உறுதிமொழியேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன.