சென்னை, மார்ச் 4 - தாம்பரம் மாநகராட்சியின் முதல்மேயராக கே.வசந்தகுமாரி பதவியேற்றுக்கொண்டார். தாம்பரம் மாநகராட்சி தேர்தலில், திமுக கூட்டணி 54 இடங்களையும், அதிமுக அணி 9 இடங்களையும் கைப்பற்றியது. சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றிப் பெற்றனர். மேயர் தேர்தலுக்கான கூட்டம் வெள்ளியன்று (மார்ச் 4) நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுக மற்றும் சுயேட்டை உறுப்பினர்கள் 12பேர் கலந்து கொள்ளவில்லை. மாமன்ற கூட்டம் தொடங்கியதும் ஆணையர் இளங்கோவன் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். திமுக சார்பில் 32ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் கே.வசந்தகுமாரியின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து மேயராக போட்டியின்றி கே.வசந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்த ஆணையர், பதவி பிரமாணம் செய்து வைத்து, மேயருக்கான உடையை வழங்கினார். அதனை அணிந்து வந்த கே.வசந்தகுமாரியை மேயர் இருக்கையில் அமர வைத்து, செங்கோல் கொடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாழ்த்து தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோன்று பிற்பகலில் துணை மேயர் தேர்தலுக்கான கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் பதவிக்கு திமுகவை சேர்ந்த 30ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஜி. காமராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி தேர்வான அவருக்கு ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.