districts

சென்னையில் ஜல்லிக்கட்டு மார்ச் 5ல் படப்பையில் நடத்த ஏற்பாடு

ஆலந்தூர்,ஜன.11- சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச்  5அன்று சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.  இதுதொடர்பாக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந் தேதி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளன. தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகின்றனர்.   மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமை யாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணி கள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேஷ், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் ஆகியோர் இருந்தனர்.