districts

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை, நவ. 16- கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா, கால் மூட்டு வலிக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜவ்வு கிழிந்திருப்பதால் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அதன் பிறகும் வலி தீராததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உயிரை காப்பாற்ற காலை அகற்ற வேண்டும் எனக் கூறி காலை அகற்றியுள்ளனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாயன்று (நவ. 16) மரணம் அடைந்தார். பெரியார் நகர் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக கால்பந்து விளையாட்டு வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துணைச் செயலாளருக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.