districts

செஞ்சியில் புதிய அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

செஞ்சி, ஜூன் 27- செஞ்சியில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசு கலைக் கல்லூரியில் இந்தாண்டு முதலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று படித்து வந்தனர். இந்நிலையில் செஞ்சியில் கலைக் கல்லூரி அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்றத்தில் செஞ்சியில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதையடுத்து செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி அருகே கல்லூர் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடமே கல்லூரியை தொடங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தற்போது அரசு வெளியிட்டுள்ள இணையதள விண்ணப்பத்தில் அரசு கலைக்கல்லூரி செஞ்சி என்ற விலாசமும் இடம்பெற்றுள்ளது. அதன்படி 2022 - 2023ஆம் ஆண்டுக்கு ஜூலை மாதம் 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நேரில் விண்ணப்பிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடமே அரசு கலை அறிவியல் கல்வி கல்லூரியை தொடங்கி நடத்த தனியார் இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2022-23ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்று இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் என அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி இணையதளம் வாயிலான விண்ணப்பப் பதிவினை ஜூலை 7ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தாங்கள் சேர விரும்புகிற கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை. பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.