districts

img

குண்டு வீச்சு மூலம் பாலஸ்தீனக் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து போராட்டம்

விருதுநகர், நவ.9- பாலஸ்தீன குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது போர் வெறி பிடித்த இஸ்ரேல் அரசு, குண்டுகளை வீசி ஏராளமான குழந்தைகளை படுசொலை செய்து வருகிறது. இதனைக் கண்டித்து சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். விருதுநகரில் பாலமுருகன் தலைமையில் போக்குவரத்து பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத்துரை பேசினார். பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சி.பாண்டியன் கண்டன உரையாற்றினார். இதில் சிஐடியு நிர்வாகிகள் ஜி.வேலுச்சாமி, எம்.கார்மேகம், ஆர்.விஜயபாண்டி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தூரில் ஏ.சீனிவாசன் தலைமையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் கண்டன உரையாற்றினார்.

இதில், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.சுப்பாராஜ், மனோஜ்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாசியில் ஜேசிடியு தலைவர் சந்திரராஜன் தலைமையில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். இந்திய தேசிய லீக் தலைவர் ஜஹாங்கீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் சாகுல்ஹமீது, சிஐடியு கன்வீனர் பழனி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.  திருவில்லிபுத்தூர் இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் சிஐடியு கன்வீனர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட உதவி தலைவர்கள் ஜி.கணேசன், ஆர்.சோமசுந்தரம், ஆர்.எம்.மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  திருவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திருமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயக்குமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் வீரசதானந்தம் உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.