திருவண்ணாமலை, செப். 26 - ஒன்றிய பாஜக அரசு மனித உரிமைகளை அடிப்படை உரிமைகளையும் தொடர்ந்து மீறி வருவதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலைக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைத்து பழிவாங்கப்படுவதை வன்மையாக கண்டித்தார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஒன்றிய அரசின் அராஜக போக்கையும் மனித உரிமையை மீறும் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக கூறினார்.
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பறிக்கும் அரசாக ஒன்றிய பாஜக ஆட்சி உள்ளது என்று கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்படி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழிற்சங்க உரிமைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.