districts

img

தஞ்சாவூரில் பாரம்பரிய கோலப் போட்டி

தஞ்சாவூர், ஜன.18 -  பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் புதன்கிழமையன்று மாலை பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல வீதியில் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு வரிசையாக ஐந்துக்கு ஐந்து அடி அளவில் பெண்கள் பாரம்பரிய புள்ளிக் கோலங்களைப் போட்டனர். இப்போட்டியில் நடுவர்களாக செயல்பட்ட வீபாரம், இன்னர்வீல் சங்கம், குந்தவை ரோட்டரி சங்கம் ஆகிய வற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் பார்வையிட்டு சிறந்த கோலங்களைத் தேர்வு செய்தனர். இதில், முதலிடத்தை செவ்வப்பநாயக்கன் வாரியைச் சேர்ந்த சாந்தி, இரண்டாமிடத்தை கருப்பூரைச் சேர்ந்த யுவஸ்ரீ, மூன்றாமிடத்தை மகர்நோன்புசாவடியைச் சேர்ந்த கவிதா ஆகியோரும், ஆறுதல் பரிசாக 10 பேரும் பெற்றனர்.  இப்பரிசுகளை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் துணைவியார் சூசன் ஜேக்கப் வழங்கினார். விழாவில் மாமன்ற உறுப்பினர் ஏ.சசிகலா, பாம்பே ஸ்வீட்ஸ் பிரதீப், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் எஸ்.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.