கரூர், பிப்.16- கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நிறைவு நாள், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிப்.14 அன்று மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமான மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு கேடயம் வழங்கியும், இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 70 அரசுப் பணியாளர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் வழங்கிச் சிறப்பித்தார். கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பிப்,13, பிப்.14 ஆகிய இரண்டு நாட்கள் அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கத்திற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பெற்றது. முன்னதாக ஆட்சிமொழிப் பயிலரங்கத்தின் முதல் நாளான பிப்.13 அன்று, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் தலைமையுரையாற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் வே. ஜோதி உடனிருந்தார்.