districts

கிலோ நெல்லுக்கு ரூ.7 மட்டுமே ஊக்கத்தொகையா?

திருவாரூர், ஆக.30 - ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.7 மட்டுமே ஊக்கத்தொகை உயர்வாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசு நடப்பு பருவத்திற்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.143 மட்டுமே உயர்த்தி, ரூ.2183 மற்றும் ரூ.2203 என்று நிர்ணயித்துள்ளதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.  இதனுடன் உற்பத்திக்கான செலவுகளையும் சேர்த்து, இதில் 50 சதவீதம் அதிகப்படுத்தி வேளாண் ஆணையம் கூறியபடி நடைமுறைப்படுத்திட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  இந்நிலையில் தமிழ்நாடு அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதாரண நெல் குவிண்டாலுக்கு ஊக்கத் தொகையாக ரூ.75 மற்றும் சன்ன ரகத்திற்கு ரூ.100 என வழங்கி வந்தது. தற்போது,  குவிண்டாலுக்கு ஏழு ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு வழங்க உள்ள ஊக்கத்தொகை ரூ.82 மற்றும் 107 மட்டுமே.  தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதியான நெல் குவிண்டால் ரூ.2500 மற்றும் கரும்புக்கு ரூ.4,000 என்பது என்னவாயிற்று. கடந்த மூன்று ஆண்டுகளில் நெல் உற்பத்திக்கான செலவு 22-28 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனை செய்யும் வரை சிந்தி,சிதறுகிற நெல்லுக்குக்கூட இந்த விலை உயர்வு ஈடாகாது.  தண்ணீர் பற்றாக்குறையால் இறவை பாசனம் செய்து, கூடுதல் செலவு செய்து விவசாயிகள் பயிர்களை காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில், நடப்பு பருவத்திலேயே ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு இதை ஈடுசெய்து விலையை நிர்ணயிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.