தஞ்சாவூர், ஆக.13-
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் ரூ.5.72 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்கு களை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதி மன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார். 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.மலர்விழி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.இளவரசி, வழக்குரைஞர் வி.வித்யா ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல், குற்றவியல், குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
முதன்மை சார்பு நீதிபதி பி.நாகராஜன், குற்றவியல் நீதித் துறை நடுவர் (விரைவு நீதிமன்றம்) எம்.முருகேசன், வழக்குரைஞர் கே.தம்பிதுரை ஆகியோர் கொண்ட 2வது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 2,013 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 261 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 5,72,65,781 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.