districts

img

‘அறிவுப்பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள்’ முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு

திருச்சிராப்பள்ளி, பிப்.18 - உலகில் அறிவுப் பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கூறினார். திருச்சி என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில், ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்ற தலைப்பில் ஞாயிறன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அகாடமி தலைவர் ஆர்.விஜயாலயன் தலைமை வகித்தார். இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உரையாற்றினார்.  அப்போது அவர் கூறுகையில், “பசி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. பசி போக்குவது என்பது மிகச்சிறந்த அறச்செயல். ஆகவேதான் புறநானூற்றில், பிறரின் பசியை போக்குபவர்களை பசிப்பிணி போக்கும் மருத்துவர் என்று கூறுகிறார்கள். வயிற்றுப் பசியை ஆற்றி விடலாம். ஆனால் மனதின் பசியை ஆற்ற முடியாது.  ருசிக்காக சிலர் மூக்கு பிடிக்க சாப்பிடுகிறார்கள். உண்மையில் மூக்கு பிடிக்க சாப்பிடுவது என்பது, அந்த உணவின் வண்ணம் மற்றும் வாசனையை பொறுத்தது. அடங்காத பசி என்பது மனப்பிறழ்வு. உடல் பசிக்கும், அறிவு பசிக்கும் தொடர்பு உள்ளது. நாம் நிறைய சாப்பிட்டு விட்டால் தூக்கம் வந்துவிடும்; சோம்பல் வந்துவிடும். எனவே எப்போதும் பாதி வயிறு சாப்பிட்டுவிட்டு, பாதி வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் விழிப்புடன் இருக்க முடியும்.  உலக வரலாற்றில் அறிவுப் பசி இருந்தவர்களால் மட்டுமே சாதிக்க முடிந்தது. கற்க கற்க அறியாமையை நாம் தெரிந்து கொள்ள முடியும். உங்களிடம் இருக்கும் வெற்றிடத்தை உணர்ந்து கற்க வேண்டும். சாக்ரடீஸ் போன்ற சாதனையாளர்கள் இறுதிவரை கற்றுக் கொண்டே இருந்தார்கள்” என்றார்.