தஞ்சாவூர், ஆக.19 - தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், கோவிலடி பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருந்தவர்களை, அன்னசத்திரத்திற்கு சொந்தமானது எனக்கூறி ஏமாற்றியவர்களை கண்டித்தும், மாற்று இடம் தருவதாகக் கூறி இதுவரை இடம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக குடியிருக்க இடம் வழங்கக் கோரியும், கோவிலடி ஊராட்சியில் குடிமனையில்லாத அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவிலடி கிளை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மரிய ஜோசப் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அரசுத் தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.முருகேசன், வழக்கறிஞர் எம்.கே.சேகர், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.உதயகுமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியப் பொருளாளர் சிவசாமி, வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், அகரப்பேட்டை வருவாய் ஆய்வாளர், கோவிலடி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனே இடத்தை ஆய்வு செய்து, அதனடிப்படையில் நத்தம் பட்டா வழங்கப்படும். அன்னச்சத்திரம் இடமாக இருந்தால் அதனை சட்டப்படி வாங்கி குடிமனைப் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.