தஞ்சாவூர், ஏப்.11- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் இராஜகிரி யைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது வயலில் உள்ள ஒரு கல்லில் எழுத்துகள் காணப்படுவதாக அவ்வூரைச் சார்ந்த ராமபாரதி, விக்னேஷ்வரன் மற்றும் கார்த்தி கேயன் ஆகியோர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் புதன்கிழமை இராஜகிரி என்று அழைக்கப்படும் ஊரின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த இப்பகுதியில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனை வர் மணிமாறன் மற்றும் பொந்தியாகுளம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முனைவர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் கள ஆய்வு செய்து கண்டறிந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: முதலாம் ஆதித்த சோழனின் பட்டப்பெயர் இராச கேசரி என்பதாகும். இம்மன்னன் பெயரால் இவ்வூர் இராசகேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பெற்றது. இப்பெயர் காலப்போக்கில் மருவி இன்று, இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது. காவிரி யின் தென்கரைத் தலங்களான கோவில்தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் கோயில், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில், நல்லூர் கோயில் போன்றவை இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டே இயங்கி வந்துள்ளன. மேற்கண்ட இவ்வூர் கோயில்களில் சோழர், பாண்டி யர், விஜயநகர நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் பராந்தக சோழன் (907–935) காலம் தொடங்கி முதலாம் ஆதித்த சோழன் (966–971) காலம் வரை இப்பகுதி இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்தே அமைந்திருந்ததை அறிய முடி கிறது. முதலாம் இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு முழுமையும் அளக்கப் பெற்றது. அவ்வாறு அளந்து வளநாடு, நாடு, கூற்றம், ஊர் எனப் பிரிக்கப்பெற்று ஆட்சி நடைபெற்றது. இவ்வாறு பிரிக்கப்பட்ட போது இப்பகுதி, ‘நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டு இராசகேசரி சதுர்வேதி மங்கலம’ என்று அழைக்கப் பட்டது. சோழர்களுக்குப் பிறகு ஏற்பட்ட விஜயநகர நாயக்கர் ஆட்சி காலத் தில் இங்குள்ள கோயில் புதுப்பிக்கப்பட்டு கோயி லின் இறைவருக்கு பாப நாச பெருமாள் என்று பெயர் சூட்டி கல்வெட் டாகப் பொறித்துள்ளனர். அன்றிலிருந்து இவ்வூர் பாபநாசம் என்று அழைக் கப்படுகிறது. பாபநாசப் பெருமாள் கோயிலே இன்றைய சீனிவாசப் பெருமாள் கோயிலாகும். தற்போதைய பாபநாசத்தில் தெற்கே குட முருட்டி ஆற்றுக்கும் வடக்கே அரசலாற்றுக்கும் இடையே அமைந்துள்ள பகுதி அரையபுரம் தட்டாங் கல் படுகை என்று அழைக்கப்படுகிறது.
இங்கு தர்மராஜ் என்பவரின் வயலில் நீரிறைக்கும் மோட்டார் பகுதியை ஒட்டியும், நீர் வெளியேறும் கால்வாய் பகுதியை ஒட்டியும் நான்கு துண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால எழுத்தமைவுடன் காணப்படு கின்றன. நான்கு துண்டு கல்வெட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவையாகக் காணப்படுவதோடு முழு மையாகவும் இல்லை. கல்வெட்டு காணப்படும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் சோழர் காலத்திய கோயில் ஒன்று முற்றிலுமாகச் சிதைவடைந்து அழிந்திருக்க வேண்டும். அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவையாக இத்துண்டு கல்வெட்டுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கல்வெட்டு வரிகளைப் படித்தறிந்த போது, இராசேந்திர சோழ விண்ணகரம் என்ற கோயிலுக்கு நிலக்கொடை வழங்கியதைப் பற்றியதாக இருக்கலாம் என அறிய முடிகிறது. அதிலுள்ள வாசகங்களில் மங்க லம், பிறவிகலாஞ்சேரி, கலாகரச்சேரி போன்ற இடங்க ளின் பெயர்களும், நக்கன் நித்தவிநோதகன், ஸ்ரீகண்டன், மும்முடிச் சோழ சோழவரையன் போன்ற பெயர்களும், மணல்பெறும்வதி, ஆதித்தவதி, ஸ்ரீகண்டன் வாய்க்கால் என்ற வாய்க்கால்களின் பெயர்களும் நில எல்லை, மா, குழி, விலையாவனம் போன்ற நில அளவு குறித்த சொற்களையும் காண முடிகிறது. சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்தவதி, ஸ்ரீகண்டன் வாய்க்கால் போன்ற நீர்நிலை களின் பெயர்களும், கலாகரச்சேரி என்ற வாழ்விடப் பகுதியும் குறிக்கப்பட்டுள்ளதை ஒப்பு நோக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.