districts

img

வந்தவாசி அருகே பஞ்சமி நிலத்தில் பயிர்கள் மீது விஷம் தெளித்து அழிப்பு

திருவண்ணாமலை,பிப்.13- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம்,  தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அருங்குணம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு அரசு பஞ்சமி நிலங்களை வழங்கியது.   அந்த நிலத்தை, ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்து தங்கள் பெயருக்கு பட்டா பெற்றுள்ளனர். இந்நிலையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் பீ.சீனிவாசராவ்  நினைவு தினமான செப்.30அன்று,  சிபிஎம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைக்கு, 7.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு நிலத்தின் உண்மையான உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு, அந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால்,  மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள், பட்டியலின மக்களை தொடர்ச்சியாக மிரட்டி வந்தனர்.  இந்நிலையில்,மாற்று சமூகத்தினர் 15க்கும் மேற்பட்டோர் பஞ்சமி நிலத்தில் அடாவடியாக இறங்கி, பட்டியலின மக்கள் சாகுபடி செய்திருக்கும் பயிர்களில் டிரோன் இயந்திரம் மூலம் களைக் கொல்லி மருந்து அடித்து நாசம் செய்தனர். அதை தடுக்க முயன்ற  பட்டியலினத்தை சேர்ந்த பயனாளியை  மிரட்டினர்.  இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாவட்டப் பொருளாளர் சிவக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட பட்டியலின பயனாளியுடன் தெள்ளார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.  அப்போது சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தீபநாதன், அண்ணாமலை, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சுகுமார் உடனிருந்தனர்.