கும்பகோணம், ஆக.5 -
நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமியின் 52 வது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் நடிப்பிசைப் புலவரின் குடும்பத்தினர் இணைந்து, அவர் பிறந்த ஊரான அம்மாசத்திரத்தில், அவரது நினைவு மண்டபத்தில் புகழஞ்சலி நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் பகுதியில் சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்த நடிகர் கே.ஆர்.ராமசாமி, தனது ஐந்து வயதிலிருந்து பாய்ஸ் நாடக குழு மூலம் நடிக்கத் துவங்கினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை கலந்த தத்துவங்களை தனது நடிப்புத் திறமையால் வெளிப்படுத்தினார்.
அப்போதைய திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் ராமசாமி திகழ்ந்தார். இவர், அறிஞர் அண்ணாவிற்கு ‘அறிஞர்’ எனும் பட்டத்தை வழங்கியவர். அண்ணாவோ, இவருக்கு ‘நடிப்பிசைப் புலவர்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தின், ஐந்து நட்சத்திர நடிகர்களில் இவரும் ஒருவராவார். சுமார் 14 படங்களில் கதாநாயகனாக நடித்து, வேலைக்காரி எனும் நாடகம் மூலம் புகழ்பெற்றார்.
இந்நிலையில், தமுஎகச-வின் அம்மாசத்திரம் கிளை சார்பில் அவரது நினைவிடத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. தமுஎகச தஞ்சை மாவட்ட தலைவர் ஜீவபாரதி, மேலை நீலமேகம், தமிழ்செல்வி, த.சொக்கலிங்கம், திமுக ஒன்றிய பிரதிநிதி எஸ்.முருகன், தெ.நீலமேகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.