districts

ஹோட்டல் வடையில் கிடந்த பல்லி உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ்

மயிலாடுதுறை, ஜூலை 8 -  

   ஹோட்டல் ஒன்றின் வடையில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியை சேர்ந்தவர் செல்வம். இவர், 8 மாத கர்ப்பிணியான தனது மகள் செல்வலட்சுமியை மருத்துவப் பரிசோதனைக்காக சனிக்கிழமை காலை மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

  மகள் சாப்பிட வேண்டும் என கூறியதால் பூம்புகார் சாலையில் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள அம்பி மெஸ் என்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே செல்வலட்சுமி பொங்கல், வடை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். வடையை சாப்பிட்ட போது அதில் பல்லி ஒன்று வெந்து கருகி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.  

   இதுகுறித்து கடை நிர்வாகத்தினரிடம் கூறவே, வேகமாக வந்த கடை நிர்வாகத்தினர் கறிவேப்பிலை கிடக்கும் என்றுகூறி, இலையில் இருந்த வடையை பிடுங்கி தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் தந்தை செல்வம் உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பிணி பெண் நலமுடன் வீடு திரும்பினார்.

    இச்சம்பவம் குறித்து நகராட்சி உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்ததன் பேரில், மயிலாடுதுறை நகராட்சி உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன், உணவகத்திடம் விளக்கம் கேட்டு, பதில் அளிக்குமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.  

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உயர்தர சைவ உணவகத்தில் உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது; தற்போது வடையில் பல்லி வெந்து கிடந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

;