பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளை அலைக்கழிப்பு செய்தது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்தநாள் விழா சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
பாஜகவின் சேலம் மாவட்ட நிர்வாகி மற்றும் லியோ பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி பார்த்தசாரதி நடத்திய இந்த நிகழ்ச்சியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வசதிகள் இல்லாமல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பயனாளிகளாக தேர்வு செய்து தள்ளுவண்டி, தையல் மிஷின், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காததால் பொதுமக்கள் பொருட்களை வாங்க அங்கும் இங்கும் அலையும் நிலை ஏற்பட்டது. மேலும் பொருட்கள் வாங்க அதிக எண்ணிக்கையில் மக்கள் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.