சிதம்பரம், நவ 6- சிதம்பரம் ரயிலடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியின் முன்பு மாணவிகளுக்கு இடையூராக பேருந்துகள், லாரிகள், மினி வேன்கள் என வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இது பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது. இதே போன்று எதிர்புறம் உள்ள நியாய விலை கடைக்கு முன்பும் பேருந்துகள் லாரிகள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிப்புகுள்ளாகியுள்ளனர். மேலும் பேருந்துகளில் அமர்ந்து கொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை சிலர் கிண்டல் செய்கின்றனர். இதனை பள்ளியில் நடைபெறும் மேலாண்மை குழு கூட்டதிலும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் மற்றும் அப்துல் கபூர் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக்கை சந்தித்து இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று பள்ளி முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தலா ரூ 500 அபராதம் விதித்து இனிமேல் இந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என எச்சரிக்கைவிடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நகர் மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், மாணவிகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.