புதுச்சேரி,ஜூன்.29-
புதிய கல்வி கொள்கையை கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைகழகம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத்சிங் விழா ஒன்றில் பேசும் போது, நடப்பு கல்வி ஆண்டில் இருந்து பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்
இந்த அறிவிப்பால் மூன்று ஆண்டு இளங்கலை படிப்புகள் நான்கு ஆண்டுகளாக மாற்றப்படும். இதன் விளைவால் மாணவர்கள் விருப்பப்படும் நேரத்தில் தங்கள் கல்வியை நிறுத்தி வெளியேறும் அபாய நிலை ஏற்படும். மேலும் பல்கலைகழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 உள்ஒதுக்கீடு சம்பந்தமாக பேசும் போது, ஏற்கெனவே உள்ளூர் மாணவர்கள் 35 முதல் 40 விழுக்காட்டினர் படிக்கின்றனர். அதனால் 25 விழுக்காடு என்று மாணவர்களை கட்டுப்படுத்த வேண்டாம் என்று உண்மைக்கு மாறான தகவல்களை துணைவேந்தர் பேசியதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைகழகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகி கோபி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில செயலாளர் பிரவீன்குமார் கண்டன உரையாற்றினார், இதில் நிர்வாகிகள் அபிஜித்,வந்தனா , சாய், விஜீஷ்,நூருதீன் உட்பட திரளான மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.