districts

img

செங்கல்பட்டு-திருவள்ளூரில் புயல் பாதுகாப்பு பேரிடர் ஒத்திகை

திருவள்ளூர்,செப்.3- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு. கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 6 கடலோர மாவட்டங்களில் புயல் அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வடகிழக்கு பருவ மழையை திறம்பட எதிர் கொள்வதற்கு இந்த புயல் அபாய ஒத்திகை பயிற்சி பேருதவியாக இருக்கும். இந்த பயிற்சியின் மூலம் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் பணியில் இணைந்து செயல்படும் துறைகள் சரிவர இயங்குகின்றனவா என்பதை அறிய முடிந்தது. புயல் அபாய காலத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மீட்பு மற்றும் நிவாரணம் போன்ற பணிகளையும் திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனுபவம் இந்த ஒத்திகைப் பயிற்சியின் மூலம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொத்தேரி ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, முடிச்சூர் ஏரி, படூர் ஏரி, மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் ஆகிய 5 இடங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி ஞாயிறன்று  நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியில் ஒன்றிய, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 6000 பேர் பங்கேற்றனர்.