மளிகைக் கடையில் குட்கா பறிமுதல்
அம்பத்தூர், அக். 30- திருநின்றவூர் அருகே பாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடை யில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக திருநின்ற வூர் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த மளிகைக் கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குட்கா, கூல் லீப் இருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து காவல்துறையினர் கடையின் உரிமையாளர் உதயகுமார் (40) என்பவரை கைது செய்து, சுமார் 8.5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தீக்கதிர் செய்தி எதிரொலி.. ஆசிரியர் பணியிட மாற்றம்
திருவள்ளூர், அக் 30- திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 450 கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 24 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள இந்த பள்ளிக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.இதற்காக அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் என அனைவரும் ஒன்றிணைந்து பள்ளியின் தரத்தை உயர்த்தியுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த நற்பெயரை கெடுக்கும் வகையில் வேதியல் பாட ஆசிரியர், சக ஆசிரியையிடம் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்வதாக கூறப்பட்டது. இது குறித்து தீக்கதிரில் செப் 19 அன்று செய்தி வெளி யானது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் விசாரணை நடத்தினார். இதன் தொடர்சியாக வேதியியல் ஆசிரியர் எம்.சதீஷ் குமார் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அம்பத்தூர் பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து
சென்னை, அக். 30- அம்பத்தூர் தொழிற்பேட்டை 2ஆவது பிரதான சாலையில் காமாட்சி லேம் பேக் எனப்படும் தனியார் தொழிற்சாலை கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் காயின்கள், எழுதுகோலில் பயன்படுத்தக்கூடிய மை மற்றும் பேப்பர் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 29) நள்ளிரவு திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள தொழிற்சாலை காவலாளிகள் இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். இதையடுத்து அருகே உள்ள அண்ணா நகர், ஆவடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட 12 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், மின்சார கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு
ராணிப்பேட்டை, அக். 30 - ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சனிக்கிழமையன்று (அக். 28) அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.கலைநேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் க. பழனிவேல் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் துவக்க உரையாற்றினார். மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. கோபால கிருஷ்ணன் தலைமையில் 15 பேராசிரியர்கள் நடுவர்களாக பணியாற்றினர். 95 ஆய்வு கட்டுரைகள், 190 இளம் விஞ்ஞானிகள், 30 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 4 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் 5 தனியார் பள்ளி என 10 ஆய்வுகள் வடக்கு மண்டல அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. இவர்கள் மண்டல, மாநில, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகளில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து இளம் விஞ்ஞானிகளுக்கும் மாவட்ட தலைவர் க. பூபாலன் கலந்துக் கொண்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பரிசு வழங்கினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் மு. தருமன் நன்றி கூறினார்.
புனரமைக்கப்படும் தாராபடவேடு, கழிஞ்சூர் ஏரிகள்: அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
வேலூர், அக்.30- குடியாத்தம் அருகே ரூ.28.45 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் உள்ள இரட்டை தாராபடவேடு, கழிஞ்சூர் இரட்டை ஏரிகளை புனரமைக்கும் பணிக்கு ரூ.28.45 கோடி ஒதுக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் 2022 டிசம்பர் 7 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிதியின் மூலம் ஏரிகளின் கரையை பலப்படுத்தி மேல் பகுதியில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அகலப்படுத்தி நடைபாதை அமைத்தல், கரைகளை இணைப்பது சிறு பாலம் அமைத்தல், ஏரிகளை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யாத வகையில்சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கழிப்பறை அமைக்கும் பணியும், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பார்வையாளர் தளம், படகு சவாரிக்கு படகு குழாம் அமைத்தல் மற்றும் பறவைகள் வந்து செல்ல ஏதுவாக ஏரியின் மையத்தில் தீவு திட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இத்துடன் மழைநீர் முழுமையாக ஏரிக்குள் வருவதற்கு உள்வாங்கி ஏரிக்கரையின் சாய்வுப் பகுதியில் அலை கற்கள் பதிக்கும் பணிகள், இயற்கைச் சூழல் மீட்டெடுக்க மரங்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 45 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது, ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி விரைவுபடுத்தவும், 2024 மே மாதத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, நீர்வளத் துறை சிறப்பு தலைமை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.