போச்சோ சட்டம்: காவல் துறையினருக்கு பயிற்சி
கிருஷ்ணகிரி, செப். 27- போக்சோ சட்டம் குறித்து காவல் துறை அலுவலருக்கான திறன் வளர்ப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012,திருத்தப்பட்ட சட்டம் 2020 குறித்து விளக்கப்பட்டது. காவல்துறையினர் பிற வழக்குகளை போல் அல்லாமல் போக்சோ வழக்குகளை கையாளும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அதிகாரி போல் அல்லாமல் நேயத்துடன் அணுக வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மற்றும் குழந்தைகள் நல குழுமத்துடன் ஒத்துழைத்து குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விதிகளுக்கு உட்பட்டு நேர்மையாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் உடன் இருந்தார்.
விவசாயம், மண்டபாண்டத்திற்கு இலவசமாக மண் எடுக்க அனுமதி
ராணிப்பேட்டை, செப். 27 - தமிழ்நாடு அரசு இயற்கை வளங்கள் துறையின் அரசாணையின் படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண் ஆகியவற்றை விவசாய பணி மற்றும் பானை செய்வதற்கு இலவசமாக எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் 47 ஏரிகளும், ஆற்காடு வட்டத்தில் 76 ஏரிகளும், கலவை வட்டத்தில் 43 ஏரிகளும், சோளிங்கர் வட்டத்தில் 39 ஏரிகளும், நெமிலி வட்டத்தில் 102 ஏரிகள் மற்றும் அரக்கோணம் வட்டத்தில் 59 ஏரிகளிலும் இலவசமாக மண் எடுத்து செல்லலாம். இதற்காக விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர் மற்றும் பொதுமக்களிடம் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக. சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
சென்னை, செப்.27- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 1963 ஆம் ஆண்டு செப்.28 ஆம் தேதி பிறந்தவர் கே.ஆர்.ஸ்ரீராம். அவரது முழு பெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை, கணக்கியல் மற்றும் எல்எல்பி, பி.காம் படித்தவர். அதனைத் தொடர்ந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து எல்எல்எம் (கடல் சட்டம்) முதுகலை பட்டம் பெற்றார்.