ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் பிஇஎம்எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது
சென்னை, நவ. 28- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5இல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகள் கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதத்தை பிஇஎம்எல் நிறுவனத்திற்கு ரூ.3,66 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், பிஇஎம்எல் நிறுவனத்தின் இயக்குநர் (ரயில் மற்றும் மெட்ரோ) ராஜீவ் குமார் குப்தாவிடம் அதற்கான ஏற்பு கடிதத்தை வழங்கினார். இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடு தல், பணியாளர்களுக்கு பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்தி ரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2026ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும். இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன், ஆர்.முரளி, (நிதி மற்றும் கணக்குகள்), என்கேஏபி நிறுவனத்தின் குழுத்தலைவர் டோனி புர்செல், பிஇஎம்எல் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் பிரவீன் குமார் மத்பால் (மெட்ரோ வணிகத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தங்கம் விலை குறைந்தது
சென்னை, நவ. 28– சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விமான சேவையில் பாதிப்பு ஏற்படலாம்- இண்டிகோ அறிவிப்பு
சென்னை, நவ.28- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவக மேற்கூரை இடிந்ததில் பெண் ஊழியர் காயம்
சென்னை, நவ.28- பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. புதனன்று காலை அம்மா உணவகத்தின் மேற்கூரை பால் சீலிங் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த உமா (46) என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார், கடந்த இரு தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. அதன் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததா அல்லது முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இடிந்து விழுந்ததா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிச.4 விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி ராக்கெட்
சென்னை, நவ.28 ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக்கோளான ப்ரோபாவை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிசம்பர் 4 ந் தேதி பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக வெளிநாடுகளுக்கும் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை டிச.,4ல் விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி 59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. மொத்தம் 1800 எடையுள்ள ப்ரோபா செயற்கைக் கோள், சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி மையத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர், முன்பதிவு செய்யலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
புதுவையில் கல்வி நிறுவனங்களுக்கு மேலும் 2 நாள் விடுமுறை
புதுச்சேரி, நவ.28- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களுக்கு மேல் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் வெள்ளி, சனிக்கிழமை(நவ.30) ஆகிய தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.
குடிநீர் குழாய் கசிவை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு
ராணிப்பேட்டை, நவ. 28 – ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், மணியம்பட்டு ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தில் ரூ. 1.40 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுது பார்க்கப்பட்டுள்ளதை புதனன்று (நவ. 27) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது குழாயில் நீர் கசிவு இருந்ததை அறிந்து அதை உடனடியாக சீரமைக்க ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மணியம்பட்டு, நரசிங்கபுரம் மற்றும் தெங்கால் ஆகிய ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சரவணன், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் முனுசாமி, பூபதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் நிர்மலா மோகன் (மணியம்பட்டு), மனோகரன் (நரசிங்கபுரம்), இந்திரா (தெங்கால்), சியாமளா (சீக்கராஜபுரம்) பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சொத்து வரி உயர பழனிசாமியே காரணம்” - அமைச்சர் குற்றச்சாட்டு
சென்னை, நவ.28- ஒன்றிய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி திருத்த தீர்மானத்திற்கு எதிராக அதிமுக போராட்டம் நடத்தி உள்ளது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரிய ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது வாய் மூடி அமைதியாய் இருந்த பழனிசாமி, இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை. ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், “2022-23ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெற 2021-22ம் ஆண்டில் சொத்து வரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள் நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு “ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்த வேண்டும்” என நிபந்தனைகளை விதித்துள்ளது. அதேபோல மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா திட்டம்’ மற்றும் அம்ரூட் 2.0 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை தமிழக அரசு இதை கடைபிடிக்காத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்கு கொடுக்கப்பட வேண்டிய மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அத்துடுன் தூய்மை இந்தியா திட்டம், அமரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மத்திய அரசு இப்படி கடுமையான விதிகளை 15-வது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது அவர்களுடன் பழனிசாமி நட்புறவுடன் இருந்தார். தற்போது தமிழக அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து உள்ளாட்சி அமைப்புகளை எல்லாம் திவாலாக்கிய பழனிசாமி, அரசியல் ஆதாயத்திற்காகவும் தங்கள் கட்சியின் கலவர ஆய்வுக் களோபரங்களை மறைத்து திசை திருப்பவும் மக்கள் மீது அக்கறை உள்ளதைப் போல நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 15-வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியதன் காரணமாக வேறு வழியின்றி, முதல்வர் ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் மிக, மிக குறைந்த அளவு சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டார். அந்த வகையில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் சொத்து வரியானது மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
5 மாதத்தில் தேசிய அடையாள அட்டை
துணை இயக்குநர் உறுதி
ராணிப்பேட்டை, நவ. 28 – ராணிப்பேட்டை மாவட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வியாழனன்று (நவ. 28) மாவட்டச் செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் வாழைப்பந்தலில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மத்திய ஜவுளி அமைச்சகம், நெசவாளர் சேவை மையம் துணை இயக்குநர் (நெசவு) பி. வாசு, நித்திய பிரியா அரசின் நலத்திட்ட உதவி கள் மற்றும் காப்பீடு குறித்து நெசவாளர்க ளுக்கு தெளிவுபடுத்தி பேசினார். முன்ன தாக பொன்னியம்மன் கோயில் அருகில் துணை இயக்குநர் (நெசவு) மரக்கன்றுகள் நட்டும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு, கைத்தறி சங்க மாவட்ட தலைவர் இளங்கோ, கிளை செயலாளர் பி. தேவன், தலைவர் ஜி. ராஜசேகர், பொருளாளர் பி. கோபு, எ. ஜம்புலிங்கம், ஆர். பாபு, எம்.செல்வரசு, எம். விஸ்வநாதன், பி. சாரதி, ஜி. சுரேஷ், இயற்கை ஆர்வலர் வே. நடராஜன் உள்ளிட்ட ஏராளமான நெச வாளர்கள் கலந்து கொண்டனர்.
பெருங்குடி பசுமை பூங்கா திட்டம் கைவிடப்பட்டது!
மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, நவ.28 - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வியாழனன்று (நவ.28) ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமை யில் நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுரு பரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்தக் கூட்டத்தில், சென்னை மாநக ராட்சியில் தொடக்கப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளி கள் என 245 பள்ளிகள் செயல்பட்டு வரு கின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறி விக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 245 பள்ளிகளிலும் ரூ.8 கோடி செல வில் கேமராக்கள் பொருத்த அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தென்சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் சுற்றி வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கு மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டி ருக்கும் குப்பையால் பல இன்னல் களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, திடக்கழிவு மறு சுழற்சி செய்வதற்கான பயோமைனிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் தங்கள் பல ஆண்டுக்கால பிரச்ச னைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அதைச் சுற்றி வாழும் மக்க ளிடம் துளிர்த்தது. ஆனால், சமீபத்தில் சென்னை மாநகராட்சி முன்வைத்துள்ள பசுமைப் பூங்கா திட்டம் அவர்களை மீண்டும் கொந்தளிக்கச் செய்தது. பள்ளிக்கரணை ஏரியில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டு உருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99 கோடி செலவில் பல்லுயிர் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இந்த இந்த திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அறி வியல் இயக்கம், சுற்றுச்சூழல் பாது காப்பு இயக்கம், குடியிருப்போர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குப்பை கிடங்கு அகற்றப்படும் இடத்தை மீண்டும் சதுப்பு நிலமாக பரா மரிக்க வலியுறுத்தப்பட்டது. இதை யடுத்து, நிர்வாக காரணங்களுக்காக இந்த திட்டத்தை திரும்ப பெறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் ஒரு லட்சத்தி 80 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. தெரு நாய்களின் இன விருத்தியை தடை செய்யும் வகையில் 5 இடங்களில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் உள்ளன. மேலும் 3, 7, 11 ஆகிய மூன்று மண்டலங்களில் ரூ.2.6 கோடி செலவில் கருத்தடை மையங்கள் அமைக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.