திருவள்ளூர் , ஜூலை 31-
வடகிழக்கு பருவமழையில் புழல் ஏரி நிரம்பும்போது கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்படும்.
அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படும்போது கொசஸ்தலை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் புகுந்து பலத்த சேதமும் ஏற்படுவது வழக்கம், இந்நிலையில் புழல் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திருவள்ளூர் நகர பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். கடந்த வாரம் நாரவாரி குப்பம் ஊராட்சியை சேர்ந்த லாரி ஒன்று புழல் நீர்தேக்கப்பகுதியில் கழிவுகளை கொட்டியதால் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது. இந்நிலை நீடித்தால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும்போது கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு குடியிருப்புகளுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதேநிலை நீடிப்பதாக மாதவரம் குடியிருப்பு நலசங்க நிர்வாகிகள் கூறினார். 2019-ல் இப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது என்றனர். நாரவாரி குப்பத்தின் நிர்வாக அதிகாரி கூறும்போது, கழிவுகளை அகற்ற வேறு இடங்களை தேடி வருகிறோம். இதற்கான இடம் பாடிய நல்லூரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் கழிவு களை அகற்ற ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.