சிதம்பரம், அக். 2- சிதம்பரம் அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லால்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், “லால்புரம் ஊராட்சியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ஊராட்சியாக மாற்ற வேண்டும். நெகிழி இல்லா கிராமமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்”என்றார். முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக பேசுகையில் கிராமப்புறம் மூலமாகத்தான் தமிழகம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்தார். மேலும் எல்லாரும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. மக்களாட்சியின் மகத்தான அமைப்பான கிராம சபை கூட்டம் ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்ற காலமாக அமைந்திட வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் ஊராட்சி வரவு-செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டது. ஊராட்சியில் செய்த பணிகள் விளக்கி கூறப்பட்டது. டெங்கு ஒழித்தல் குறித்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஷபானா அஞ்ஜூம், லால்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி சேகர் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.