சென்னை, ஜூலை 18 - இ-பஸ், மினி பேருந்துகளை போக்கு வரத்து கழகமே இயக்க வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 18) அதிகாலையில் பணிமனைகள் தோறும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்பும் வரை சிஎல் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்,
15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே தொடங்க வேண்டும், 2022 டிசம்பர் மாதத்திற்கு பிறகு பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு (19 மாதங்க ளாக) வழங்கப்படாமல் உள்ள ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும், 108 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்க தடையாக உள்ள அரசாணை 142ஐ ரத்து செய்ய வேண்டும், 1.4.2003க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளிக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நெல்லை கோட்டத்தில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க விடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.