districts

img

சூரிய தகடுகள் பொருத்தப்பட்ட சூரிய மரம் ஒரு நாளைக்கு 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி

சென்னை, அக்.11- ‘ஐ லவ் ஐசிஎப்’ என்று வடிவமைக்கப் பட்ட சூரிய தகடுகள் பொருத்திய சூரிய மரத்தை ஐசிஎப் முதுநிலை மின் பொறியாளர் ஜே.எக்ஸ்.ஜான்சன் பெர்னாண்டோ  திங்களன்று திறந்து வைத்தார். சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎப்) சுற்றுச்சூழலை மேம்பாடுத்தும் நோக்கத்தில் இயற்கை வளங்களை பயன்படுத்தி பசுமை மின்சக்தியை தயாரித்து வருகிறது. இந்திய ரயில்வேயின் முதல் கார்பன் நெகடிவ் தகுதி பெற்ற தொழிற்சாலை என்ற சான்றிதழை பெற்றதுடன் சமீபத்தில் மத்திய மின்சக்தி மேம்பாட்டு அமைப்பின் சிறந்த மின்சக்தி சேமிப்புக்கு ‘சூண்யா பிளஸ்’ சான்றிதழையும் பெற்றுள்ளது. ஐசிஎப் காற்றாலைகள், சூரிய தகடுகள் மூலம் ஓராண்டிற்கு 2.22 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்த போதிலும் அதில் 1.89 மில்லியன் யூனிட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பெரம்பூரில் உள்ள ஐசிஎப் இந்திய ரயில்வேயின் முதல் நேர்மறை மின்சக்தி பயன்பாட்டு தொழிற்சாலையாக மாறியுள்ளது.இதனை நினைவு கூறும் வகையில் சூரிய தகடுகள் பொருத்திய சூரிய மரம் திறக்கப்பட்டது. இந்த சூரிய மரம் 1.125 கிலோவாட் சக்தி கொண்டது. கடும் வெயில் இருக்கும் நாள்களில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 யூனிட் வரை மின்சக்தி தயாரிக்க முடியும். இந்த நிகழ்வில், ஐ.சி.எப் பொது மேலாளா் பி.ஜி. மல்லையா, தலைமை மின் பொறியாளர் சி.ஆர்.ஹரீஷ், இதர துறைத்தலைவர்கள், ஐ.சி.எப் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.