articles

img

பாசிசத்தை வீழ்த்திய சோவியத் வரலாற்றை மறைக்க முயலும் மேற்கத்திய சக்திகள்

பாசிசத்தை வீழ்த்திய சோவியத் வரலாற்றை மறைக்க முயலும் மேற்கத்திய சக்திகள்

நாஜி ஜெர்மனியை  சோவியத்   யூனியன் தோற்கடித்தது என்ற வரலாற்று உண்மையை மேற்கத்திய நாடுகள் மறைக்க முயற்சிப்பதாக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் சுட்டிக்காட்டுகிறார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி (மே 18) ஏட்டில்  பேரா. பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள கட்டு ரையின் சாராம்சம் வருமாறு: இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க செய்த தியாகம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தொடக்கத்திலிருந்தே, ஹிட்லர் தலைமையிலான நாஜி ஜெர்மனியின் தோல்வி தங்களது முயற்சியின் விளைவுதான் என்று கூறி இந்த உண்மையை மறைக்க மேற்கத்திய சக்திகள் முயற்சித்து வருகின்றன. ஆரம்பத்தில் இப்படிப்பட்ட கதையாடல் ஒரு கமுக்கமான  முயற்சியாக இருந்தது. போரை நேரடியாக அனுபவித்த மேற்கத்திய நாடுகளின் மக்களிடையே இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காலப்போக்கில், போரைப் பார்க்காத புதிய தலைமுறைகள் உருவாக, இந்த உண்மையை மறைக்கும் முயற்சி வேகம் பெற்றது. ஹாலிவுட் படங்களும் இந்த உண்மை மறைப்பில் பங்காற்றின. ‘தி லாங்கெஸ்ட் டே’, ‘தி கன்ஸ் ஆஃப் நவரோன்’, ‘சேவிங் பிரைவேட் ரயன்’ போன்ற படங்கள் மேற்கத்திய சக்திகள் நாஜிக்களை வீரமாக வென்றதாக காட்டின. இந்தப் படங்கள் மேற்கத்திய பார்வையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டன; ஆனால் இரண்டாம் உலகப் போர் முதன்மையாக  மேற்கத்திய சக்திகளுக்கும் நாஜிக்களுக்கும் இடையே நடந்ததாக ஒரு தவறான கருத்தை உருவாக்குவதில் பங்களித்தன. உண்மை என்ன? உண்மையில், போரின்போது பிரிட்டன் சுமார் 5லட்சம் மக்களையும், அமெரிக்கா அதை விட சற்று குறைவான எண்ணிக்கையிலும் இழந்தது. ஆனால் சோவியத் யூனியனில் 2.7 கோடி மக்கள் உயிரிழந்தனர் - இந்த உண்மை மேற்கத்திய பொது நினைவில் மறைந்துவிட்டது. இந்த உண்மை மறைப்பு, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் பனிப்போர் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருந்தது. பாசிசத்தை வீழ்த்துவதில் சோவியத் யூனியனின் பங்கை மறைப்பதுடன், சோவியத் யூனியன் ஒரு விரிவாக்கக் கொள்கை கொண்ட சக்தி என்றும், மேற்கு ஐரோப்பாவை நோக்கி ஆக்கிரமிப்பு திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் மேற்கத்திய சக்திகள் இன்னொரு பெரிய பொய்யை பரப்பின. சமீபத்தில் முடிவடைந்த போரில் 2.7 கோடி மக்களை இழந்த மற்றும் பேரழிவுக்கு உள்ளான ஒரு நாடு, அந்தப் போரின் முடிவில் எந்த ஆக்கிரமிப்பு திட்டங்களையும் கொண்டிருக்க முடியாது என்பது மறக்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற ஏகாதிபத்தியவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட மேற்கத்திய பிரச்சாரம், ஐரோப்பாவிற்கு சோவியத் ஆபத்து என்ற பொய்க்கதையை வேண்டுமென்றே உருவாக்கியது. உண்மையில், சோவியத் யூனியன் யால்டா மற்றும் போட்ஸ்டாம் மாநாடுகளில் எட்டப்பட்ட புரிதலை மிகவும் கவனமாக கடைப்பிடித்தது. கிரேக்க ‘புரட்சிக்கு’ உதவக் கூட தயங்கியது. பாசிசத்தின் மீதான வெற்றியை இவர்கள் ஏன் கொண்டாடவில்லை? தற்போது பாசிசம் உலகின் பல நாடுகளில் மீண்டும் வருவதால், எட்டு தசாப்தங்களுக்கு முன் (80 ஆண்டுகளுக்கு முன்) பெற்ற பாசிசத்தின் மீதான வெற்றியைக் கொண்டாடுவது கூட மேற்கத்திய சக்திகளுக்கு முன்னுரிமையாக இல்லாமல் போய்விட்டது. பெரும்பாலான மேற்கத்திய அரசாங்கங்கள் ஒன்று பாசிசவாத அரசுகளாக உள்ளன; அல்லது உருவாகிவரும் பாசிச கட்சிகளுடன் ஒப்பந்தங்களை செய்ய திட்டமிடுகின்றன. டொனால்டு டிரம்ப் முதல் வகையைச் சேர்ந்தவர். உண்மையில், அவரது சகா எலான் மஸ்க், நவீன நாஜி கட்சியான ஜெர்மன் ஏஎப்டி(AfD)யின் வெளிப்படையான ஆதரவாளர். ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெற்றுள்ள உக்ரைன் ஆட்சி, இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த ஸ்டெபன் பண்டேரா என்ற குற்றவாளியைப் பின்பற்றுபவர்களால் நிறைந்துள்ளது. விளாடிமிர் புடின், சோவியத் யூனியனின் பெருமையை தனதாக்க முயற்சிப்பதாக வைத்துக்கொண்டாலும், குறைந்தபட்சம் பெருமை எங்கே உள்ளது என்பதை அறிந்திருப்பதற்காக பாராட்டப்பட வேண்டும்.  இவ்வாறு பேரா.பிரபாத் பட்நாயக் விவரித்துள்ளார்.