articles

img

மத்தியப் பிரதேசம் : இந்திய இராணுவத்தை மதமயமாக்கும் அபாயகரமான முயற்சிகள்

மத்தியப் பிரதேசம் : இந்திய இராணுவத்தை மதமயமாக்கும் அபாயகரமான முயற்சிகள்

உலகளவில் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுக்கு பெயர்போன இந்திய இராணுவத்தின் மீது இந்தியா எப்போதும் பெருமை கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கீழ் இந்த பெருமைமிக்க பாரம்பரியம் ஆபத்தில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநிலச் செயலாளர் ஜஸ்விந்தர் சிங் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார். மே 18 பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் அம்சங்கள் வருமாறு: இராணுவ நிறுவனங்களில் மத மற்றும் கருத்தியல் தாக்கங்கள் நுழைக்கப்படுவதற்கான அதிகரித்து வரும் அச்சங்கள் எழுந்துள்ளன. சமீபத்திய உதாரணமாக, கர்னல் சோபியா குரேஷியை அவமதிக்கும் விதமாக அமைச்சர் விஜய் ஷா கூறிய கருத்துக்கள் பாஜக தலைமையால் கண்டிக்கப்படவில்லை. சைனிக் பள்ளி சர்ச்சை பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்  சைனிக் பள்ளிகள் ஆயுதப் படைகளில் வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2020-ல், ஒன்றிய அரசு பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியில் 100 புதிய சைனிக் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டது. மத்தியப் பிரதேசத்தில் மண்ட்சூர், நீமுச், கர்கோன், கட்னி மற்றும் நர்மதாபுரம் ஆகிய இடங்களில் ஐந்து பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திட மிருந்து கணிசமான அரசு மானியங்களைப் பெறுகின்றன – அதாவது, மாணவர் கட்டணத்தில் 50 சதவீதம் அல்லது ஒரு மாணவருக்கு ரூ. 40,000 வரை. தேசம் முழுவதும், இத்தகைய பொது - தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் 61 சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன, இவற்றில் 70 சதவீதம் ஆர்எஸ்எஸ் தொடர்பு டைய அல்லது பாஜக சார்ந்த நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அரசியல் ரீதியாக நடுநிலை யான மற்றும் மதச்சார்பற்ற இராணுவப் படையை மதிக்கும் நாட்டிற்கு இந்த போக்கு மிகவும் கவலையளிக்கும் ஒன்றாகும். கோடேகாவனில் பெயரிடும் சர்ச்சை மத்தியப் பிரதேசத்தில் ஆறாவது சைனிக் பள்ளி கோடேகாவன் (நரசிங்புர் மாவட்டம்) எனும் இடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கவலைக்குரிய விஷயம், இந்த பள்ளிக்கு குற்றப் பின்னணி கொண்ட சர்ச்சைக்குரிய நபரான மணிநாகேந்திர சிங் பெயர் சூட்டப்படுகிறது. மணிநாகேந்திர சிங், பாஜக தலைவரும் தற்போதைய ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான பிரஹ்லாத் படேலின் மருமகனும், முன்னாள் எம்எல்ஏ ஜலீம் சிங் படேலின் மகனுமாவார்.  இந்த நபரின் வரலாறு மிக மோசமானது: - 2021-ல், ஒரு குற்றவியல் வழக்கில்     குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். - 2023-ல், 2019-ல் ஒரு தலித்தை     தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் இருந்தார். - அவரது மனைவி நீது சிங், குடும்ப     வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகிய வற்றிற்காக மேற்படி மணி நாகேந்திர சிங்கிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்தார்; - இந்த நீது சிங், 2023-ல் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் இறந்தார். பொது நிறுவனங்கள், குறிப்பாக சைனிக் பள்ளிகள், உயர்ந்த ஒழுக்க மற்றும் நெறிமுறை தரங்களைப் பிரதிபலிக்க வேண்டும். அத்தகைய நிறுவனத்திற்கு இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரின் பெயரால் பெயரிடுவது இராணுவத்தின் மதிப்புகளைக் குறைக்கிறது. செயல்பாட்டுக்கான அழைப்பு இது வெறும் மாநில அளவிலான கவலை அல்ல - இது நமது ஜனநாயகம் மற்றும் இராணுவ நெறிமுறைகளின் மையத்தை தொடும் ஒரு தேசிய பிரச்சனை. கோடேகாவனில் உள்ள சைனிக் பள்ளிக்கு மணிநாகேந்திர சிங் பெயரிடுவதை சிபிஐ(எம்) கடுமையாக எதிர்க்கிறது. அனைத்து சைனிக் பள்ளிகளும் நேரடி அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொடர்புடைய அமைப்புகளுக்கான ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.