மாநில வருவாயைப் பாதிக்காத வகையிலான ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்
அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
சென்னை, ஆக. 21 - மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி(ஜிஎஸ்டி) விகிதத்தை மறு சீரமைப்பதற்குத் தேவை யான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிற் கான மற்றும் சரக்குகள் மற்றும் சேவை கள் வரி இழப்பீட்டு மேல்வரியினை மறு உருவாக்கம் செய்வதற்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுப் பேசி னார். அப்போது, “சரக்குகள் மற்றும் சேவை கள் வரி விகிதங்களை சீரமைக்கும் முனை வுகள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இதற்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் வரிசீரமைப்பு வழிவகுக்கக் கூடாது” என்றார். “சமூக நலத்துறையில் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம் முழு மனித ஆற்றலையும் அடைவதற்கான வழியைக் காட்டுகின்றன. எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் வரிசீரமைப்பு முனைவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயைப் பாதுகாக்கும் விதமாக அமைய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். “சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும் தருணத்தில் இழப்பீட்டு மேல்வரியும் முடிவுக்கு வரவுள்ளது. ஒரே நேரத்தில், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதக் குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல்வரியினை நீக்குவது ஆகியன மாநிலத்தின் வருவாயை கணிசமாகப் பாதிக்கும். எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகித மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டு மேல்வரியை நீட்டிக்க வேண்டும். 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டு மேல்வரியினை மாநிலங்களுக்கு மட்டும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். உடனடி தீர்வாகக மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிதமாக எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உயா்த்த வேண்டும். மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதத்தை மறுசீரமைப்பதில் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்” என்றும் அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினார்.