தொலைந்த நகரில் வாழும் உயிரினங்கள்
அட்லாண்டிக் பெருங்கடலில் 700 மீட்டர் ஆழத்தில் உயிரினங்கள் வாழும் புகைப் பரப்பு ஒன்று விஞ்ஞானிகளால் 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைந்து போன வெப்ப நீரூற்றுக் களம் (Lost City Hydrothermal Field) என பெயரிடப்பட்ட இதில் சிறு குன்றுகள் முதற்கொண்டு 60 மீட்டர் உயரக் கோபுரங்கள் வரை காணப்படுகின்றன. இப்பரப்பு 120,000 ஆண்டுகளுக்கு மேலாக கடல் நீருடன் வினை புரிந்து ஹைடிரஜன், மீத்தேன் மற்றும் பிற வாயுக்களை கடலில் வெளிவிட்டு வருகிறது. இதன் புகைபோக்கியிலிருந்து 40 °C வெப்பத்தில் வாயுக்கள் வெளிவருகின்றன. இங்கு நத்தைகளும் இணைகாலிகளும் அதிக அளவில் வசிக்கின்றன. நண்டு, இறால், கடல் குச்சி மற்றும் வாளை போன்றவைகளும் அரிதாகக் காணப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் இதிலிருந்து 1,268 மீட்டர் நீளமுள்ள மாதிரிப் பாறைகளை வெட்டி எடுத்து சாதனை புரிந்துள்ளனர். பூமியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உயிரினம் எவ்வாறு தோன்றின என்பதற்கான ஆதாரம் இதில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பரப்பிலிருந்து உண்டாகும் ஹைடிரோ கார்பன்கள் காற்று மண்டலத்திலிருக்கும் கார்பன் டை ஆக்சிடினாலோ அல்லது சூரிய ஒளியினாலோ உண்டாகுபவை அல்ல; மாறாக கடலின் அடியாழத்தில் ஏற்படும் வேதி வினைகளால் உண்டாகின்றன. ஹைடிரோ கார்பன்கள் உயிரின் அடிப்படைக் கூறு என்பதால் உயிர் இதைப் போன்ற ஒரு வசிப்பிடத்தில் உருவாகியிருக்கலாம். மேலும் நம் கோளில் மட்டுமல்லாது வேறு இடங்களிலும் உருவாகியிருக்கலாம். இதற்கிடையில், இதைச் சுற்றியுள்ள பகுதியில் வளங்களை எடுக்கும் உரிமையை போலந்து நாடு பெற்றுவிட்டதாக 2018இல் அறிவிக்கப்பட்டது. ‘தொலைந்து போன நகர்’ப்பகுதியில் தோண்டியெடுக்க வளங்கள் ஏதும் இல்லை என்றாலும் சுற்றி நடத்தப்படும் தோண்டுதல்களினால் வெளிவரும் பொருட்கள் இந்த வாழ்விடத்தை சிதைத்துவிடும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். உயிரின் நீடித்து நிலைக்கும் தன்மைக்கு சான்றாக இந்த பரப்பு நின்று கொண்டிருக்கிறது. அதை சிதைத்துவிடக் கூடாது.
புதுமையான டயர்
சீனா, ரப்பர் டயர்களை கழித்துவிட்டு புதுவகையான டயர் ஒன்றை உருவாக்கியுள்ளது. சின்குவா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள இந்த டயர், வடிவை நினைவில் வைத்திருக்கும் உலோகக் கலவையால் ஆனது. அழுத்தப்படும்போது இவை வளைந்து கொடுக்கும்; அழுந்திக் கொள்ளும்; விரிந்து கொடுக்கும். ஆயினும் உடனே பழைய வடிவிற்கு மீண்டு விடும். நாசாவின் ரோவர் தொழில்நுட்பத்திலிருந்து தோன்றிய சிந்தனை இது. இவை காற்றில்லாத, பங்ச்சர் விழாதவை மட்டுமல்ல மிகை வெப்பம், குளிர், அதிக அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படாதவை. கரடு முரடான பாறைப் பரப்பில் ஓட்டினாலும் சரி, உறைபனியான கோபி பாலைவனமானாலும் சரி இவை ஒருபோதும் பங்ச்சர் ஆகாது; தேயாது; கழலாது. இது வெறும் டயர் அல்ல; எதிர்கால தடையில்லா இயங்கு சக்தியாகும்.
பூமியின் மடியிலிருந்து வழியும் தங்கம்
பூமியானது கோர் (core) எனும் மைய அச்சு, மேண்டில் எனும் நடுப்பகுதி மற்றும் கிரஸ்ட்(crust) எனும் மேல்பகுதி ஆகியவற்றை கொண்டது. பூமி உருவாகிக் கொண்டிருந்த போது கன உலோகங்கள் பூமியின் மையை அச்சுக்குள் சென்றன. பின்னர் எரிகற்கள் மோதியதில் தங்கமும் பிற கனஉலோகங்களும் பூமியின் மேற்பரப்பிலும் படிந்தன. ஆனால் மைய அச்சில் உள்ள தங்கத்துடன் ஒப்பிடும்போது இது சிறு துளியே. இப்போது எரிமலை பாறைகளில் செய்யப்பட்ட ஆய்வில், மைய அச்சிலிருந்து தங்கம் உட்பட அரிதான உலோகங்கள் கசிந்து மேல்பரப்பிற்கு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேற்பரப்பில் காணப்படும் கன உலோகங்களில் மைய அச்சிலிருந்து வந்தது எவ்வளவு, விண்வெளியிலிருந்து வந்தது எவ்வளவு என்பது அறியப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஜெர்மனியிலுள்ள காட்டிங்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நில்ஸ் மெஸ்லிங் குழுவினர் ஐசோடோப் பகுப்பாய்வின் மூலம் பூமியின் அச்சிலிருந்து வந்த உலோகங்களை கண்டுபிடித்துள்ளனர். மைய அச்சிலிருந்து உலோகங்கள் வெளிவருவது அதிக அளவில் இல்லை. மேலும் 2,900 கி.மீ தோண்டி அதை எடுப்பதும் சாத்தியமல்ல. இந்த கண்டுபிடிப்பு நமது கோள் குறித்தும் இதைப் போன்ற பாறைகளிலான பிற கோள்கள் குறித்தும் புதிய தகவல்களை தருகிறது என்பதே முக்கியமாகும். மேலும் ஹவாய் போன்ற பெருங்கடல் தீவுகள் மைய அச்சுக்கும் மேண்டிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உருவாகிய மிகை வெப்ப பொருட்கள் மேலெழுந்து வந்ததானால் உருவானது என்பதை நிரூபிக்கலாம் என்கிறார் புவி வேதியியலாளர் மத்தியாஸ் வில்போல்ட். இந்த ஆய்வு ‘நேச்சர்’ இதழில் வந்துள்ளது.